எதுக்கு ஆயுத பூஜை செய்யணும்..?

ஆயுதபூஜை ஏன் செய்கிறோம்? அதற்கான காரணம் என்ன என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Update: 2024-10-10 12:48 GMT

ஆயுத பூஜை -கோப்பு படம் 

நமது முன்னோர்கள் காலம்தொட்டு காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.

ஆனால் பல பண்டிகைகள் எதற்கு கொண்டாடப்படுகிறது என்பது தெரியாது. நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பும் காரணமும் உண்டு. அந்த வகையில் நாளை நாளை ஆயுதபூஜை கொண்டாடவுள்ளோம். அது ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிஞ்சிக்குவோமா..?

ஆயுதபூஜை கொண்டாட்டம் எப்படித் தோன்றியது?

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்ற பின்னர் யார் கண்ணிலும் படாமல் இருக்க அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஒரு நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் அந்த நாளுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான்.  ஆயுதம் என்பது ஏதோ போருக்கு உதவும் கருவிகள் மட்டுமல்ல, அன்றாடம் நமக்கு உதவும் கத்தி முதல் வேளாண்மைக்கு உதவும் கருவிகள், நம்மை சுமக்கும் வாகனங்கள், நாம் எழுதும் பேனா, புத்தகங்கள் என நமக்கு பயன்தரும் கருவிகள் அனைத்துமே ஆயுதம் என்ற பொருளுக்குள் அடங்கும்.

அதற்காக கொண்டாடப்படுவதே ஆயுத பூஜை. வாழ்வில் நமது உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் கருவிகளை இறைவனுக்கு உரிய பொருளாக வணங்குவதே ஆயுதபூஜை .

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தம் செய்து, பொட்டு வைத்து, பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

எப்படி வழிபடுகிறோம்

நாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்து, அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகன் போன்ற தெய்வங்களின் படங்களை வைத்து அதற்கு முன் தேங்காய்,பூ, பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். கூடவே படிக்கும் மாணவர்களின் பேனா,புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவைகளையும் வைத்து பூஜைகள் செய்யவேண்டும்.

மறுநாள் காலை அதாவது நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்

Tags:    

Similar News