திருவண்ணாமலையில் காதலி தற்கொலைக்கு காரணமான காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருவண்ணாமலையில் காதலி தற்கொலைக்கு காரணமாக இருந்த காதலனுக்கு ஆயுள் தண்டைன விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
HIGHLIGHTS
மதுரை நேதாஜி நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தர்ராஜன்(34). திருவண்ணாமலை கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் கணேசன் மகள் வினோதா(27). இவர், திருவண்ணாமலை கோர்ட்டில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் சென்னையில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய பணியில் வினோதா சேர்ந்தார். ஆனாலும், இருவருக்கும் இடையேயான காதல் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், சுந்தர்ராஜனுக்கு வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் கிடைத்ததால், கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி திருவண்ணாமலை வானவில் நகரில் சுந்தர்ராஜன் தங்கியிருந்த வீட்டுக்கு வினோதா வந்திருந்தார். அப்போது, இருவரும் வெவ்வேறு சாதி என்பதால், வினோதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என சுந்தர்ராஜன் மறுத்துள்ளார்.
அதற்கு ''காதலிக்கும்போது தெரியாத சாதி, திருமணத்தின்போது மட்டும் தெரிகிறதா'' என வினோதா கேள்வி எழுப்பியுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரக்தியடைந்த வினோதா, சுந்தர்ராஜன் தங்கியிருந்த வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் சாதி வன்கொடுமை பிரிவுகளில் சுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார். மேலும், இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் காதலியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிபதி கோவிந்தராஜன், பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதோடு, ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோர்ட் ஊழியர் சுந்தர்ராஜனை போலீசார் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.