நெல்லையில் தடையை மீறி மது விற்பனை: ஒருவர் கைது, 600 மது பாட்டில்கள் பறிமுதல்
தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்த ஒருவர் கைது. சுமார் 600 பாட்டில்கள் பறிமுதல்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மதுபானங்களை பதுக்கி வைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் துரைகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் தச்சநல்லூர் பகுதியில் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்த ஊருடையாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மேலப்பாளையம் பகுதியில் சேக் என்ற வாள்சேக் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரே நாளில் 600 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேக் என்ற வாள்சேக் தப்பிச் சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தச்சநல்லூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.