தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு துவக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு குறித்து கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வர்த்தகரெட்டிப்பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான “சமூக தரவு பதிவு - 2023” கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் 27,520 மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை பதிவு செய்யும் விதமாக சமூக தரவு பதிவு 2023 கணக்கெடுப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணியில் பயிற்சி பெற்ற 493 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பு பணியின்போது சேரிக்கப்படும் தரவுகளை கணக்கெடுப்புப் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று அவர்களின் தரவுகளை சேகரித்து அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோன்று மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கணக்கெடுக்காக வரும் மகளிர் திட்ட களப்பணியாளர்களால் கேட்கப்படும் விபரங்களை சரியாக தெரிவித்து முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாற்றுத்தினாளிகள் உரிமைகள் திட்டம் வாயிலாக கோட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை மையம் துவங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.