தொழில்அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி : எஸ்பியிடம் புகார்
மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்வதாக தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மகாராஜாநகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 26.1.21 அன்று புது டெல்லியை சேர்ந்த மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் சுமித் பரத்வாஜ் என்பவரிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஆன்லைன் மூலம் ஒப்பந்தம் செய்து உள்ளார். தொடர்ந்து சுமித்பரத்வாஜ் என்னென்ன பொருட்கள் அனுப்பப்படுகிறது? என்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பினாராம்.
இதனால் கல்யாணசுந்தரம் தூத்துக்குடியில் உள்ள வங்கியில் இருந்து சுமித் பரத்வாஜ் வங்கி கணக்குக்கு ரூ.18 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தாராம். ஆனால் சுமித்பரத்வாஜ் பணத்தை பெற்றுக் கொண்டு, பொருட்களை அனுப்பாமல் மோசடி செய்து உள்ளார். இது குறித்து கல்யாணசுந்தரம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த எஸ்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.