தமிழகத்தில் தஞ்சாவூர் முதலிடம்..
அபராதத் தொகை விதித்தல், வழக்கு பதிவு செய்வதில் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக மாவட்ட SP தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை 1.02 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ2.05 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது இதுவரை 361 வழக்குள் பதிவு செய்யப்பட்டு, ரூ1.80 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்திலேயே இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிக அளவில் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வழக்குப் பதிவு செய்தது, அதிக அளவில் அபராதத் தொகை வசூலித்தது ஆகிய இரண்டிலுமே தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது," என அவர் தெரிவித்தார்.
தற்போது நோய்த் தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று (மே 6) முதல் மே 20-ம் தேதி வரை தமிழகத்திலுள்ள மளிகைக் கடைகள், டீ கடைகள், காய்-கனி கடைகள் ஆகியவை மட்டும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நேற்று மாலை 5 மணிவரை செயல்பட்ட 5 கடைகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, முகக் கவசம் அணியாதவர்கள் மீது 887 வழக்குகள்;, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது 4 வழக்குகள் என இன்று ஒரே நாளில் மொத்தம் 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ1,79,400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல முகக்கவசம் அணியாதவர்கள் மீது தஞ்சாவூரில் 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42,600 ரூபாய், வல்லத்தில் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,400 ரூபாய், ஒரத்தநாட்டில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,600 ரூபாய், பட்டுக்கோட்டையில் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,200 ரூபாய், திருவையாறில் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,200 ரூபாய், பாபநாசத்தில் 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24,000 ரூபாய், கும்பகோணத்தில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40,400 ரூபாய், திருவிடைமருதூரில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,000 ரூபாய் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததற்காக பட்டுக்கோட்டையில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2000 ரூபாய் அபராதத் தொகையும் என இன்று ஒரே நாளில் மொத்தம் 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ1,79,400 அபராதத் தொகை வசூலிக்கபப்ட்டுள்ளதாக எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார்.