வரலாற்று ஆய்வாளர் வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு
தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளரும், மகாகவிபாரதியின் ஆர்வலருமான தஞ்சை வெ.கோபாலன் (85) உடல் நலக்குறைவால் காலமானார்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் தில்லையாடியில் 1936 -ம் ஆண்டு பிறந்த வெ.கோபாலன், தஞ்சாவூர் எல்ஐசி காலனியில் வசித்து வந்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, திருவையாறு பாரதி இயக்கத்தின், பாரதி இலக்கியப்பயிலக இயக்குனராக 2001 -ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று, பாரதி கருத்துக்களை பரப்பும் பல்வேறு பணிகளை செய்து வந்தார்.
குறிப்பாக பாரதி குறித்த அஞ்சல்வழிப் பாடத்திட்டத்தினை தொடங்கி அதன்வழியாக ஆயிரக்கணக்கானோர் மகாகவிபாரதி குறித்து அறிந்து கொள்ள பாடங்களை நடத்தி வந்தார்.
இளைஞர்களுக்கு பாரதி குறித்த பயிலரங்குகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வந்தார். பாரதி கலை, இலக்கியம், குறித்து பத்திரிக்கைகளிலும், சமூகவலைதளங்களிலும் தொடந்து எழுதி வந்தார்.
இவர் திருவையாறு வரலாறு, தஞ்சை மராட்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு, வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம், திருக்கோயில்களில் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட, பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
திருவையாறு நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவராகவும், அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக சம்மேளனத்தின் தஞ்சைக் கோட்டப் பொறுப்பாளராகவும், தேசிய சிந்தனைக்கழகத்தின் மாநில துணைத்தலைவராகவும், தஞ்சை தியாகபிரம்ம சபாவின் துணைத்தலைவராகவும், திருவையாறு சாயிபாபா அறக்கட்டளை அறங்காவலராகவும், தஞ்சை காந்தி இயக்க அறக்கட்டளை அறங்காவலராகவும், பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஸ்ரீதர், சுரேஷ் என இரண்டு மகன்கள், சாந்தி என்ற மகள் உள்ளனர்.