தஞ்சை மாநகராட்சி பகுதியில் சாலை அகலப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
தஞ்சை மாநகராட்சி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் உள்ள இருவழிச் சாலைகளை, நான்கு வழி சாலைகளாக தற்போது விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ளும் போது, சாலைகளில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை அண்ணா நகர் - நாஞ்சிக்கோட்டை சாலை இருபுறங்களிலும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள், ஜே.சி.பி. பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும், சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதையடுத்து பொது மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்தனர். ஆர்.எம்.எஸ். காலனி, பர்வீன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.