மகளிர் மட்டும் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி
தஞ்சாவூரில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் ரயில் நிலைய வளாகத்தில் பொதுமக்களிடையே வாக்குப்பதிவில் அவசியத்தை வலியுறுத்தி இன்று பெண்கள் மட்டும் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திரளான மகளிர் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களிப்பது நமது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தஞ்சை ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வழியாக சென்று தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் நிறைவடைந்தது.