கலெக்டர் ஆபீஸ் முன் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண் - பரபரப்பு
தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு, குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், ஆய்க்குடி கிராமம் சக்திநகரை சேர்ந்த ரெஜிலா ராணி என்பவர், தனது குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென அவர், தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரிடம் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர்.
போலீசார் விசாரணையில் கூறப்படுவதாவது: ரெஜிலா ராணியின் கணவர், 2009இல் விபத்தில் இறந்து விட்டார். புற்று நோயால், ரெஜிலாவின் இடது கை செயலிழந்தது. 2003ம் ஆண்டு, இலவச வீட்டு மனை பட்டா, தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டது. தற்போது தாயுடன் கஷ்டமான சூழ்நிலையில் வசித்து வருகிறார்.
இதனிடையே, இலவச வீட்டு மனை பட்டா இடத்தை, கல்யாணி என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அரசு அதிகாரிகளிடம் ரெஜிலா ராணி மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டா இடம், மீண்டும் தனக்கே திரும்ப கிடைக்கச் செய்யுமாறு கூறி, கலெக்டரிடம் இன்று மனு அளிக்க வந்துள்ளார். மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.