காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம்: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்
திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்
HIGHLIGHTS
திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாட்டோம் எனவும், தமிழகத்தில் கிராமப்புறங்களில் பாஜக வளர்ந்து வருகிறது எனவும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில, பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலில் போது மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தெரிவிக்கும்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை திமுகவுடன் நடைபெறவில்லை. அப்படி நடைபெறும் பட்சத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியை கேட்டு பெறுவோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் டி.வி.கே என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும் டி.வி.கே என ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவ வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கருத்துக்களை கேட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதி கூட பெற முடியாது எனவும், முன்பு போல் இல்லாமல் தற்போது பாஜக கிராமப்புறங்களில் நல்லதொரு வளர்ச்சியை பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தாங்கள் கூட்டணியில் இருந்தாலும், ஐஎன்டிஐஏ கூட்டணியில் தாங்கள் இல்லை எனவும் ஐஎன்டிஐஏ கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வது தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முன்வருவதில்லை. தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் நமது வளங்கள் வீணாகிக் கொண்டுள்ளன. காவேரி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ரீதியாக உரிய அழுத்தங்களை கொடுத்தும் நீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்டவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.