தென்காசியில் காது சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு!
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவின் கீழ் காது கேட்கும் திறனுக்கான சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவின் கீழ் காது கேட்கும் திறனை பரிசோதிக்கும் கருவி BERA பிரிவை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின்,உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் முன்னிலையில் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் உலக செவித்திறன் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு செவித்திறன் ஆய்வு மேற்கொண்டு அதில் 15 பேருக்கு காது கேட்கும் கருவி முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விழாவில் சிறப்பாக செயல்படும் காது மூக்கு தொண்டை மருத்துவர் மணிமாலா அவர்களை இணை இயக்குனர் நலப் பணிகள் பிரேமலதா அவர்கள் பாராட்டி ஊக்குவித்தார் .
உங்கள் குழந்தையின் கேட்கும் திறனில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா, நமது தென்காசி அரசு மருத்துவமனையில் ABR/ BERA-ஐப் (BRAIN EVOKED RESPONSE AUDIOMETRY) பயன்படுத்தி தூக்கத்தின் போது குழந்தைகளின் காது கேளாமையைக் கண்டறியலாம்.
வயது வரம்பு: பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை (குழந்தைக்கு முதல் முன்னுரிமை)
குறுகிய நேரத்தில் குழந்தையின் காது கேட்கும் திறனைக் கண்டறிய முடியும்.
காது கேளாமை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஆரம்பகால தலையீடு அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை அளிக்கும்
உங்கள் குழந்தைக்கு எப்போது செவித்திறன் பரிசோதனை தேவைப்படும்
1. பெயர் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை
2. எளிய கட்டளைகளுக்கு பதிலளிக்கவில்லை
3. ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறியாமை
4. காது தொற்று
5. காது குறைபாடு
6. பேச்சை புரிந்து கொள்வதில் சிரமம்
7. காது கேளாத குடும்ப வரலாறு
உங்கள் குழந்தைக்கு காது கேளாமை இருந்தால் என்ன செய்வது?
1.காது கேட்கும் கருவி சோதனை மற்றும் பொருத்துதல் போன்ற உடனடி சிகிச்சை.
2. அம்மா காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை
3. செவிவழி வாய்மொழி சிகிச்சைக்கான இலவச ஆலோசனை.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
என்ற திருவள்ளுவரின் வாக்கு போல அனைத்து குழந்தைகளும் செவித்திறனோடு எந்த குறைபாடு இல்லாமல் வாழ அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கேட்டுக் கொண்டார்.