சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படையெடுக்கும் பாம்புகள்
சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படையெடுக்கும் பாம்புகளால் ஆசிரியர்கள், மாணவர்கள், அச்சமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பள்ளி முழுவதும் தண்ணீர் தேங்கி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. மேலும் இப்பகுதி வயல் ஓரத்தில் அமைந்து உள்ளதால் அடிக்கடி பாம்புகள் வந்து கொண்டு இருந்ததாகவும், அதனை வரவிடாமல் தடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியை தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தரை தளத்தை உயர்த்தவும், பாம்புகள் புகாவண்ணம் சரிசெய்யும் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இப்பகுதியில் அடிக்கடி பாம்புகள் தென்படுவது, கண்ணில் காணும் பாம்புகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் விரட்டி விடுவது தொடர்கதையாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுரண்டை தீயணைப்பு நிலையத்தின் மூலம் மூன்று முறை பாம்பை பிடித்து சென்றனர். இருப்பினும் பெண்கள் கழிவறை அருகே பாம்பை பார்த்த மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக சுரண்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்தபோது பாம்பு கழிவறையின் செப்டிங் டேங்க்கிற்குள் சென்று உள்ளது. இதனால் பாம்பை பிடிக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
ஏற்கனவே இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது இப்பகுதி மாணவ மாணவியர் பெற்றோர் ஆசிரியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டமைப்புகளை மேம்படுத்தி பாம்புகள் புகாவண்ணம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் பாம்புகள் புகாமல் தடுக்கும் மூலிகை செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்