பெண்கள் நாளிதழ்களை படித்து நாட்டு நடப்பை அறிந்து கொள்ள வேண்டும்:ஏடிஎஸ்பி பேச்சு
பெண்கள் தினந்தோறும் நாளிதழ்களை படித்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா.
சர்வதேச பெண்கள் தினம் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து நிலைய வளாகத்தில் சங்க தலைவர் மாருதி மோகன்ராஜா தலைமையில் சர்வதேச பெண்கள் தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நிலைய முதல்வர் ராமர், சங்க துணை தலைவர் இப்ராஹிம் பாபு, நிர்வாக அலுவலர் பார்வதி, சங்க பொருளாளர் பிரசாத், முன்னிலை வகித்தனர். இதில் மாமன்னர் கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஓய்வு விஸ்வநாதன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க மகளிர் அணி பொறுப்பாளர் மர்சியா மன்சூர் வாழ்த்திப் பேசினர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் குறித்த கையேடு, பேனா மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் கீதா பேசுகையில், அரசினர் தொழிற்பயிற்சி பெண் பயிற்சியாளர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் ஆற்றலும் உள்ளது எனவே அனைவரும் தைரியமாகவும் துணிவுடன் வாழ வேண்டும். இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பதால் அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியையும் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் உங்களால் இயன்ற உதவியை கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் பெண் குழந்தை பிறப்பதற்கு தாய் ஒரு போதும் காரணம் இல்லை தந்தை மட்டுமே காரணம் என்பதே அறிவியல் ரீதியான உண்மை.நமது நாட்டு விஷயங்களையும் உலக விஷயங்களையும் ஒவ்வொரு நாளும் தினசரி செய்தித்தாள்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் காவல்துறையில் காக்கி யூனிபார்ம் விரும்பி ஏற்றுக் கொண்டேன் என்னைப்போல் உங்களில் பலர் விரும்பி காக்கி யூனிபார்மை ஏற்றுக் கொண்டுள்ளது சந்தோஷம் என்றார் அவர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்..நிறைவாக அலுவலக உதவியாளர் வினோலியாமணி நன்றி கூறினார்