புதுக்கோட்டையில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பி அகற்றாமல் போடப்பட்ட சாலை
புதுக்கோட்டை பகுதியில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பி அகற்றாமல் சாலை போட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளையும் புதுப்பிக்கும் சாலைகளையும் தரமாக அமைக்க வேண்டும் சாலை மீது சாலை அமைக்க கூடாது என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஏற்கனவே அறிவித்திருந்தார். புதிதாக சாலை அமைக்கும் பணியை தமிழக முதலமைச்சர் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை அடி பம்புடன் சேர்த்து அமைக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகி பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல் தற்போது புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள கற்பகா நகரில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்திலிருந்து சாலையின் நடுவே எர்த் கம்பியை அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலையின் நடுபுறத்தில் உள்ள கம்பியுடன் சேர்த்து சாலை அமைத்து உள்ளது. அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மின்கம்பத்தின் அருகே தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே அந்த கம்பி இருப்பதால் இரவு நேரத்தில் அந்த சாலையில் செல்பவர்கள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் நிலை உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் இக்கம்பியை அப்புறப்படுத்தி சாலையை தரமாக அமைத்து இதுபோன்று அலட்சியமாக சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் கேட்டபோது: புதுக்கோட்டை நகராட்சியில் மூன்று கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மண் சாலைகள் தார்ச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கற்பகநகரிலும் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றும் சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பத்திலுள்ள ஸ்டே கம்பியை அகற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்துறையினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.