பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தாம்பூலத்தட்டு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தாம்பூலத்தட்டு பரிசாக வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக கடந்த மாதம் 193 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 24,082 நபர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதியன்று 189 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 12,727 நபர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 26ம் தேதி அன்று 198 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 22,230 நபர்களுக்கும், நான்காம் கட்டமாக கடந்த3ம் தேதி அன்று 198 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 21,054 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, 5ஆம் கட்டமாக 10ம் தேதி மாவட்டத்தில் இதற்கென 240 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு கிராமத்திலும் இம்மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திற்கு 30,000 நபர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திடத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள், வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,500 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆம் கட்டமாக 240 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குரும்பலூர் புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி அம்மாபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், லப்பைக்குடிக்காடு, பூலாம்பாடி மற்றும் அரும்பாவூர் ஆகிய 4 பேருராட்சிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தலா ஒரு தாம்பூலத்தட்டு பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசுப்பொருட்களை அந்தந்த பேரூராட்சி பகுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வழங்கினர்.