படிப்பிற்காக டேப் வாங்க சிறுக சிறுக சேர்த்த ரூ 10135 நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்
நாகையில் ஆன்லைன் வகுப்பிற்காக சிறு, சிறு சேமித்த ரூ 10135 பணத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு கலெக்டரிடம் சிறுவன் வழங்கினார்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் சீதா தம்பதியினரின் மகன் சுதாசன். இராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சுதாசன் தனது ஆசிரியரின் அறிவுரைப்படி ஆன்லைன் படிப்பிற்காக டேப் வாங்குவதற்கு தாய் தந்தையிடம் பணம் வாங்கி சஞ்சாய்கா திட்டத்தில் சிறுக சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா நிவாரணத்திற்கு பொதுமக்கள் நிதி வழங்கவேண்டும் என்ற முதல்வரின் அறிவிப்பை தொலைக்காட்சிகளில் பார்த்த சிறுவன் தானும் நிதி வழங்க வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளான்.
அதனை தொடர்ந்து தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகைபுரிந்த சிறுவன் சுதாசன் டேப் வாங்குவதற்கு தான் சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரத்து 135 ரூபாய்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பிடியில் பலர் உயிரிழந்து வரும் நிலையில் உயிர் முக்கியமா? டேப் முக்கியமா என்று பார்த்தேன் உயிர்தான் முக்கியம் என்பதால் நான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வருக்கு வழங்கியுள்ளதாக சிறுவன் சுதாசன் தெரிவித்துள்ளார். காசோலை வழங்கும் நிகழ்வில் மாணவரின் தாய் தந்தை மற்றும் ஆசிரியர்கள், நாகை திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உட்பட பலர் உடனிருந்தனர்.