நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு
நாகப்பட்டினத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தராததை கண்டித்து சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகம் அமைக்க கோரி டிசம்பர் மாதம் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மீனவர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.
இதனிடையே இதற்கான எந்தவித பணிகளும் துவங்காததால், அதிருப்தி அடைந்த சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள், தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்காததாக அரசை கண்டித்து இன்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ள மீனவர்கள், தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அமைச்சரும் செவிமடுத்து கேட்காமல் தங்களை புறந்தள்ளி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மீனவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க போவதில்லை எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.