கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணையில் இருந்து, முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி அணையில் இருந்து, வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில், முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கலெக்டர் தண்ணீரை திறந்து வைத்தார். பொங்கி வந்த தண்ணீரில், மலர் தூவி வரவேற்கப்பட்டது.
கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறியதாவது: தற்போது, 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில் 22.11.2021 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கன அடியும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடியும் என மொத்தம் 180 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் சையத், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.