துவரையில் நுனி கிள்ளுதல் அதிக மகசூலை தரும்: வேளாண்மை உதவி இயக்குநர்
துவரையில் நுனி கிள்ளுதல் செய்து அதிக மகசூல் பெற கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் அறிவுரை வழங்கினார்.
HIGHLIGHTS
இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் துவரை விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெறப்பட்ட மழையை பயன்படுத்தி துவரை விதைப்பு அதிக அளவில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துவரையில் ஒரு புதிய தொழில்நுட்பம் நுனி கிள்ளுதல் ஆகும். அதன்படி, துவரை விதைத்து 50 முதல் 75 நாட்களுக்குள் நுனி கிள்ளுதல் பணியை செய்ய வேண்டும். துவரை செடியின் நுனியை 5 செமீ அளவு கிள்ளி எடுத்து விடுவதன் மூலம் அதிக விளைச்சல் தரும் பக்க கிளைகள் உருவாக தூண்டலாம். அவ்வாறு உருவாகும் பக்க கிளைகள் ஒவ்வொன்றும் அதிக வளர்ச்சி அடையும் திறனுடையவையாக இருக்கும். மேலும் போதுமான அளவு சூரிய ஒளி பெற்று அதிக பூக்கள் மற்றும் திரட்சியான காய்களை எளிதாக உருவாக்க இந்த பக்க கிளைகள் துணை புரிகின்றன. இந்த ஒரு எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினாலே துவரையில் குறைந்தது 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம்.
மேலும் துவரை பூக்கும் தருணத்தில், சதவீத டிஏபி கரைசல் தெளித்திட்ட வேண்டும். அவ்வாறு தெளிப்பதற்கு ஒருநாள் முன்னரே, 10 லிட்டர் நீரில் 1600 கிராம் டிஏபி-யை கரைத்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலை டிஏபி கரைசலின் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி, அதனை 80 லிட்டர் என்ற அளவில் நீர் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். 5 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிப்பதன் மூலம் பூ உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, அதிக திரட்சியான காய்கள் உருவாகும். பரிந்துரை செய்யப்பட்ட அளவு டிஏபி கரைசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எனவே, விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் உள்ள துவரையின் பருவத்திற்கு ஏற்ற மேற்கண்ட எளிய தொழில்நுட்பங்களை தவறாது பின்பற்றி கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.