முதலமைச்சர் உருவ பொம்மை எரிப்பு: 700 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது
குமரியில் முதலமைச்சர் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம், பணகுடியில் தேர்தல் முன்விரோதத்தில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை பாரதியார் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
பொன். இராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், குழித்துறை, சுசீந்திரம் உட்பட 21 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திமுக எம்.பி யால் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட நிலையில், அதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவிக்காத தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தடுத்த போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை கைப்பற்றினார்.மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர், இதே போன்று மாவட்டம் முழுவதும் 700 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர், இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.