நேர்காணல் ரத்து குறித்து முறையான அறிவிப்பு இல்லை என குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று துவங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை துறை சார்பில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலி பணியிடத்திற்கு 4405 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் கால்நடை துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையில் 70 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யும் பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், சைக்கிள் ஓட்டுதல், கால்நடைகளை கையாளுதல், மற்றும் நேர்காணல் ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் , கர்ப்பிணிப் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளித்து நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
இந்தத் தேர்வு நேற்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்றது. தேர்வில் பங்கேற்க நிறைமாத கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் பெண்கள், பொறியாளர் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டியும் , மாடுகளை பராமரிப்பு முறைகளைக் கையாண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் திடீரென நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி முறையான பத்திரிக்கை செய்திகள் இல்லாததால் வழக்கம் போல் இன்று நேர்முகத் தேர்வுக்காக காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு பகுதிக்கு வந்தனர்.
அங்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்படும் காவல்துறையினர் அவர்களுக்கு முறையாக அறிவிப்பு செய்து கூட்டத்தை கலைத்தனர்.
கால்நடைத்துறை முறையான அறிவிப்பு செய்யாததால் நீண்ட தூரத்தில் இருந்து வந்த தேர்வர்கள் ஏமாற்றத்துடனும் , அரசின் அலட்சிய செயல்பாட்டை கண்டித்தும் சென்றனர்.