நில விற்பனையில் தகராறு: கையை வெட்டிய சித்தப்பா, தம்பி
பள்ளபரந்தூரில் நிலத்தை கூடுதல் விலைக்கு முடித்ததால் விரோதம் ஏற்பட்டு கொலை முயற்சி நடைபெற்றுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளபரந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த இவரது சித்தப்பா திருமலை மற்றும் அவரது மகன் அரசு ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு அதே கிராமத்தில் ஒருவர் நிலத்தை வேறு ஒருவருக்கு பேசி முடித்த நிலையில், விநாயகம் கூடுதல் விலைக்கு மற்றவர்களுக்கு பேசி விற்றுத் தருவதாக கூறி விற்று தந்துள்ளார்.
இந்த நில விற்பனையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியுள்ளது. இந்நிலையில் இக்கிராமத்தில் ஒருவரது இறுதி சடங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரசு மற்றும் திருமலை ஆகியோர் விநாயகத்தை சரமாரியாக கத்தியை கொண்டு தாக்கினர்.
இதில் விநாயகத்தின் இடது கை மணிக்கட்டு துண்டாகி, வலது கை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விநாயகம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கை துண்டிக்கப்பட்டதால் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் விசாரணை மேற்கொண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் நில விற்பனையில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரது கை துண்டிக்கப்பட்டதால் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் சிதறி ஓடினர்.