காஞ்சிபுரம் நிவாரண முகாம்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்.. மேயர் நேரில் ஆய்வு...
காஞ்சிபுரத்தில் உள்ள இரண்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளோருக்கு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மேயர் மகாலட்சுமி யுவராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய்த்துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்ட 21 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிக வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் குடிசை வீட்டில் வசிக்கும் நபர்களை பாதுகாப்பாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர வருவாய்த்துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், சாலை ஓரங்களில் உள்ள ஆபத்தான மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியையும் தீயணைப்பு துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைதுறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சாலையோரம் ஆபத்தை விளைவிக்க கூடிய மரங்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையர் கண்ணன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டு பகுதிகளில் நீர் நிலைகளின் கரையோரம் வசிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கேளம்பாக்கம் பள்ளியில் 152 பேரும், புலிமேடு பகுதி வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் என அனைவரும் அந்தந்த பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு அங்குள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள இருளர் இன மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் கண்ணன் ஆகியோர் மாமன்ற உறுப்பினர்களுடன் சென்று பார்வையிட்டனர்.
பின்னர், இருளர் இன மக்கள் 250-க்கும் மேற்பட்டோருக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறுசுவை உணவுகளையும் வழங்கி அவர்களின் நலன் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் குமரகுருநாதன், பணிக்குழு தலைவர் சுரேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி, செவிலிமேடு மோகன், சந்துரு, ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், விஸ்வநாதன், சாந்தி, பகுதி செயலாளர்கள் தசரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.