விண்ணப்பங்கள் தேக்கமா? வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்திய மேயர்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்ச நிகழ்வுகளை தவிர்க்க மேயரின் அதிரடி விளம்பர பலகை பொதுமக்கள், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் பெருநகர ஆட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளினை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களுக்கு தேவையான குடிநீர் , சாலை வசதி , தெரு மின்விளக்கு, பாதாள சாக்கடை வசதிகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இருந்து வந்த குடியிருப்புகள் மாநகராட்சி அனுமதியின்றி ஊழியர்கள் துணையுடன் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புகளை பதிவு பெறாமலும் , குடியிருப்புக்கான வரியை குறைத்து செலுத்தி வந்து உள்ளது தெரியவந்தது.
மேலும் அரசின் புதிய வரி திட்டத்தினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் செயல்படுத்தி , பதிவு பெறாதவர்கள் உடனடியாக பதிவு மேற்கொள்ளவும் இதற்கான காப்புத்தொகை உரிய கால அவகாசத்துக்குள் செலுத்தி உறுதி செய்ய கூறினார்.
மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி, தற்போது தொழிற்சாலைகள் பெருகி வருவதால் புறநகர் வளர்ச்சி அதிகமாக உள்ளதால், தொழிற்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் காஞ்சிபுரத்தில் குடியிருக்கும் நிலை ஏற்பட்டது.
பழைய குடியிருப்புகளை மாற்றி புதிய குடியிருப்புகளாக கட்ட அனுமதி பெற முறைகேடான வழிகளை பொதுமக்கள் மாநகராட்சியில் பெற்று வந்ததும், காலதாமதம் ஏற்படும் நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்த மேயர் அதிரடி முடிவாக, காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு புதிய வரி போடுதல் புதிய வீடு கட்ட அனுமதி கூறுதல் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுதல் பட்டா பெறுதல் போன்ற சேவைகள் ஏதேனும் தடை இருந்தால் உடனடியாக மேயரின் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அவருடைய எண்னை விளம்பரமாக மாநகராட்சி முன்பு பெரிய அளவில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைத்துள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தாலும், சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் இதனை வரவேற்கும் செயல் காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களது தேவைகளை கால தாமதம் இன்றி பெற்று செல்லவும், குடிநீர் இணைப்பு , பாதாள சாக்கடை, புதிய வரி உள்ளிட்டவைகளுக்கு அரசு கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் கேட்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேசுவதை தவிர்க்க வெளிப்படையான நிர்வாகம் நடத்திடவும் காஞ்சிபுரம் மாநகராட்சி தயாராக உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலே இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சேவை குறைபாடுகள் இன்றி பொதுமக்கள் எளிதில் கோரிக்கைகளை whatsapp மூலமும் தெரியப்படுத்தலாம் எனவும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மென்பொருள் பட்டதாரியும், நிர்வாக திறன் கொண்ட பயிற்சி அதிகம் உள்ளதால் இது போன்ற அறிவிப்புகளை எடுத்து வருகிறார்.
மேயரின் இந்த அறிவிப்பு பலகை காஞ்சிபுரம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்சத்தை தவிர்க்க மேயர் புதிய வகையில் இதனை நடைமுறைப் படுத்துவதை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.