காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கண்ணன் அவதார திருவிழா உரியடியுடன் துவக்கம்
பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீயதுகுல வேணுகோபால பஜனை மண்டலத்தின் சார்பில் கண்ணன் அவதார விழா கொண்டாடப்படுகிறது
HIGHLIGHTS
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் ஸ்ரீ யதுகுல வேணுகோபால பஜனை மடம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கண்ணன் அவதார விழா துவங்கி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காலை சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கப்பட்டு 18ஆம் தேதி வரை நாள்தோறும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீ கண்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
துவக்க நாளான இன்று காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருள சிறுவர்கள் உறி குத்துதலுடன் விழா துவங்கியது.
இதனை அடுத்து சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இறுதியில் இளைஞர்கள் வழக்கு மர உச்சியில் கட்டப்பட்ட சிறப்பு பரிசு பொருட்களை கைப்பற்றிய பின் வீதி உலா துவங்கியது.
ஸ்ரீ கண்ணன் அவதார விழா துவக்க நிகழ்ச்சியில் வான வேடிக்கை வழக்கு மரம் ஏறுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணன் அருளை பெற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
நாள்தோறும் இரவு நரசிம்ம அலங்காரம் , பரமபதநாதன் அலங்காரம் , ராம அலங்காரம் , குதிரை வாகனம் , பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் பசு கன்றுடன் எழுந்தருள், ஸ்ரீ ருக்மணி திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்வு நடைபெற உள்ளது.