திருநாவலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
இந்தியத் தேர்தல் ஆணையம் 01.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தமுறை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,13.11.2021,14.11.2021 மற்றும் 27.11.2021,28.11.2021 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை பாதிப்பினால் கூடுதல் 20.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய தினங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் (31.12.2003 வரை பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்கும், பெயர்,முகவரி மற்றும் வேறு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் இம்முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1272 வாக்குச்சாவடி மையங்களில் இச்சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாக்காளர் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமிற்கு சென்று பெயர் மற்றும் முகவரியினை வாக்காளர் பட்டியல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பெயர்திருத்தம், எழுத்துப் பிழை திருத்தம் மற்றும் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.