உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்துசெய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே உரம் கொள்முதல் செய்யவேண்டும். மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விற்பனையின் போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள உர விவரங்கள் மற்றும் விலை விவரங்களை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் தகவல் பலகையை தினசரி பராமரித்தல் வேண்டும். உரம் கொள்முதல் பட்டியல்கள், இருப்பு பதிவேடுகளை சரியாக பராமரித்தல் வேண்டும்.
மானிய விலை உரங்களை விவசாயிகளின் ஆதார் எண் கொண்டு விற்பனை செய்ய வேண்டும். விவசாயி அல்லாதோருக்கு உரம் விற்பனை செய்தல் கூடாது. தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மானிய விலை உரங்களை, தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, உரங்கள் வாங்கும்போது வேறு உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தினாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். என வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.