தருமபுரியில் அரசு பேருந்துகள் மார்க்கம் வாரியாக இயக்கம்
தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு பேருந்துகள், மார்க்கம் வாரியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) முதல், இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு பேருந்துகள், பேருந்து நிலையங்களில் இருந்து மார்க்கம் வாரியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி, தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு இன்றுமுதல், இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தருமபுரி மண்டலத்தின் மூலம் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலிருந்து கீழ்க்கண்ட மார்க்கங்களுக்கு, அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கடைசி பேருந்தாக புறப்பட்டு, எதிர் திசையில் சென்றடையும் வகையில், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் மார்க்கம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சென்னை, திருப்பத்தூர், சேலம், மேட்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர் மார்க்கமாக புறப்பட்டு செல்கிறது.
அதே போன்று பென்னாகரம் பேருந்து நிலையம் தருமபுரி, மேச்சேரி மார்க்கமாக புறப்படுகிறது. பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து, தருமபுரி, ஓசூர் மார்க்கமாகவும், பொம்மிடி பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி, சேலம், ஓமலூர் மார்க்கமாகவும், அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம், தருமபுரி இயக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.