டெங்கு, சிக்கன்குனியா அபாயத்தால் சுற்றுபுறத் துாய்மை முக்கியம்: தர்மபுரி கலெக்டர்
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு, சிக்கன்குனியா பரவ வாய்ப்புள்ளதால் சுற்றுபுரத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டம், கடமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொட்டவூர் துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், வடக்கிழக்கு பருவ காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு வழிகாட்டுதலின் படி தர்மபுரி மாவட்டத்தில் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில், பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 6 சுகாதார ஆய்வாளர்களை கொண்டு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் முகவரிகள் பெறப்பட்டு மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு பட்டியல் தயார் செய்யப்பட்ட விபரத்தினை வட்டாரம் வாரியாக பிரிக்கப்பட்டு 8 வட்டாரங்கள் மற்றும் நகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.
இந்த முகவரிகள் அடங்கிய கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட காய்ச்சல் கண்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 16 பள்ளி சுகாதார நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு பணிக்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு. ஒவ்வொரு வட்டாரத்திலும் 20 பேர் வீதம் 200 களப்பணியாளர்கள், ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 10 பேர் வீதம் 100 களப்பணியாளர்களையும் நகராட்சிகளில் 33 களப்பணியாளர்களும் என மொத்தம் தர்மபுரி மாவட்டத்தில் 333 களப்பணியாளர்களைக் கொண்டு கொசுப்புழு ஒழிப்பு பணியான அபேட் மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும், களப்பணியாளர்களை கொண்டு வீட்டின் உட்புறமும் வெளிபுறமும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொசுபுழுக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து தண்ணீரில் ஊற்றப்படுகிறது. நிலவேம்பு குடிநீர் காய்ச்சல் கண்ட பகுதிகளில் வழங்கப்படுகிறது. துண்டு பிரசுரங்கள் வழங்கி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் ஆணையின்படி பொதுமக்கள் தங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவகூடும். எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுரத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும் எனவும், பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும் எனவும், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும் எனவும், சுகாதாரபணியாளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், வீடு வீடாக செல்லும் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், காய்ச்சல் கண்ட நபர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் நமது மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், நோய் தொற்று வரும் முன் நம்மை காத்துக்கொள்வதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். மக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து காக்கும் நோக்கில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை மாவட்டம் முழுவதும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.
மேலும், மக்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதோடு தர்மபுரி மாவட்டம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக உருவாகுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்தார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார் உட்பட தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.