ஒலிம்பிக் செல்பி ஸ்பாட்: தருமபுரி கலெக்டர் திறந்து வைத்தார்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்- வீராங்கனையரை ஊக்குவிக்கும் வகையில், தருமபுரியில் செல்பி-ஸ்பாட்டை கலெக்டர் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்,வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், செல்பி ஸ்பாட் யை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, இன்று திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும், அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை அரசு ஊக்குவிக்கிறது.
விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தருமபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பயன்படுத்தி கொண்டு, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்களது விளையாட்டுத்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கான தங்களது முயற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட விளையாட்டு துறையும் துணை நிற்கும். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, பேசினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜென் சுசீலா, துணை வட்டாட்சியர் பாரதி, பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.