கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: 27 பேருக்கு பணி நியமன ஆணை
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்ற 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்ற 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் அறிவுரை வழங்கி பேசிய ஆட்சியர், தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக இருந்த 27 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக எனது தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
இப்பணியிடங்களுக்கு 6,486 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு தர்மபுரி அரசுக்கலைக்கல்லூரி கலை அரங்கில் 18.04.2022 முதல் 23.04.2022 வரை நேர்காணல் நடத்தப்பட்டு, இந்நேர்காணலில் 3,457 விண்ணப்பதாரர்கள் பங்கு பெற்றனர். இந்நேர்காணலில் பங்குபெற்ற நபர்களில் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஆணை பெற்றுள்ள அனைவரும் உங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி இடத்திற்கு சென்று, சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி என்பது கால்நடை பராமரிப்பு துறைக்கு ஒரு முக்கியமான பணி ஆகும். இப்பணியினை நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித சிறு தவறு கூட ஏற்படாத வகையில் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். அரசுப்பணி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அத்தகைய அரசுப்பணி உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இப்பணி கிடைக்கப்பெற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றி உங்கள் பணிக்கும், நீங்கள் பணியாற்றுகின்ற துறைக்கும் நற்பெயரை ஈட்டித்தர வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக இருந்த 27 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்த 6486 விண்ணப்பதாரர்களில் 3457 விண்ணப்பதாரர்கள் கடந்த 18.4.2022 முதல் 23.4.2022 வரை தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கு பெற்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தகுதியான 27 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவ்வாறு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, அவர்களால் இன்று வழங்கப்பட்டது.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் திருநங்கை ம. சமீரா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பணி நியமன ஆணை பெற்றுக்கொண்டவர்களில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம் புரிந்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இதர பிரிவினர்களும் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சி.இளங்கோவன் கலந்து கொண்டார்.