100%வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி
தருமபுரியில் வாக்களர்களிடையே 100%வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் 1000 நபர்கள் பங்கேற்ற இருச்சக்கர வாகன பேரணியில் மாவட்ட கலெக்டர் எஸ்.பி.கார்த்திகா , கலந்து கொண்டார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோலப்போட்டி, வாக்களிக்க அழைப்பிதழ் வழங்குதல், மனித சங்கிலி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காவலர்கள், ஆண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் என 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எஸ்.பி.கார்த்திகா அவர்களும் கலந்து கொண்டு வாகனத்தை ஓட்டி சென்றார்.
இந்த வாகன பேரணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக சென்று தருமபுரி நான்குமுனை பகுதியில் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எஸ்.பி.கார்த்திகா பறக்க விட்டார்.
இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி சார்ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, வட்டாட்சியர் ரமேஷ், உதவி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.