கடலூரில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு
கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியை செய்யவிடாமல் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.சாலை அமைப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது விளை நிலங்களை கொடுத்துள்ளனர்.
நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையும் வழங்கிய நிலையில், கடலூர் அடுத்த வழிசோதனை பாளையத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. அப்போது கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலைப்பணி நடைபெற விடாமல் தடுத்து நிறுத்தினர்.விவசாயிகள் வழங்கிய நிலத்திற்கு கூடுதல் தொகை கேட்டு தாசில்தார், மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் அருகிலுள்ள கிராமங்களில் வழங்கப்பட்ட தொகை போல தங்களுக்கும் சமமான அளவு தொகையை வழங்க வேண்டும் எனவும், விளை நிலங்களில் தற்போது இப்பகுதி விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ள நிலையில் வாழைக்கு இழப்பீடு வேண்டும், சொட்டு நீர் பாசனத்திற்காக செய்யப்பட்ட செலவினையும் இதில் சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி நிறுத்தப்பட்டதால் அதிகாரிகள் ஒரு வார கால அவகாசம் கொடுத்து, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து சென்றனர்.