கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மைய சேவையினை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ தொடக்கி வைத்தனர்.
HIGHLIGHTS
கொரோனா இரண்டாம் அலையில் இந்திய அளவிலும், மாநில அளவிலும் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருந்தது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க பாரத பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 34 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இன்று திறக்கப்பட்டன.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது. புதிதாக அமைக்கப்பட்ட 1000 எல்.பி.எம். திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் கடலூர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன்உற்பத்தி ஆலையில் ஒரு நிமிடத்தில் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை காற்றிலிருந்து உற்பத்தி செய்யும் திறன் பெற்றதாகும். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் க. பாலசுப்பிரமணியம் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்று ஆக்சிஜன் உற்பத்தி மைய சேவையினை துவக்கி வைத்தனர்.
இதில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாயலீலா, மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.