அரியலூரில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம்
அரியலூர் மாவட்டத்தில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
HIGHLIGHTS
பல்வேறு இன்னலான பணிகளுக்கிடையே வீரமரணம் அடைந்த தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நினைவாக காவலர் வீரவணக்க நாள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், 21.10.2021 இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உயிர்நீத்த வீரர்களுக்குக்கு மலரஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதையுடன் 66 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வீர வணக்க நாளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உரையாற்றுகையில் 'அக்டோபர் 21ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது, 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் hot springs என்ற இடத்தில் சீனா ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைகள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை, கடலலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்திலிருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம். கடற்கரை ஆனாலும் பனிமலை சிகரமான ஆளும் காவல் பணி இடர் நிறைந்தது.
இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 377. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு அவர்களின் வீர தியாகம் வீண் போகாது என்று இந்த காவலர் வீர வணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம்' என்றார்.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டு வீரமரணமடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.