பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கல்
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2021-2022ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 88 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,768 மாணவர்கள், 4,130 மாணவியர்கள் என மொத்தம் 7,898 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர்களுக்கு அவர்கள் கல்லூரி செல்லும்போது மாதம் ரூ.1,000- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயனாக கல்லூரி செல்லும் மாணவியர்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில் எதிர்கால சிந்தனையுடன் பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக போதையில்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் போதை இல்லா தமிழ்நாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் நேற்றைய தினம் சென்னையில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, உரிய அறிவுரைகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்திலும் காணொலிக்காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
மாணவர்கள் தங்களது நண்பர்கள் உள்ளிட்ட பிற நபர்களுக்கு போதை உள்ளிட்ட தவறான பழக்கங்கள் இருந்தால் அது குறித்த தகவல்களை தங்களது வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்று, தங்களது பெற்றோர்களின் கனவை நனவாக்கி, வாழ்வில் வெற்றி பெற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர், அரசுப் பேருந்துகளில் 'சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் என்றும் உங்களுடன் மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்' என்ற விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (கூ.பொ) மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பேபி, ஜோதிமணி, செந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் க.செல்லம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சாமிதுரை, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பானுமதி, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.