வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவீரம்
பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் த.ரத்னா ஆய்வு
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் த.ரத்னா ஆய்வு செய்தார்.
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இம்மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் த.ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி வரிசையின்படி அடுக்கி வைப்பதற்கு தேவையான இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பான செய்திகளை சேரிப்பதற்கு ஏதுவாக ஊடக மையம் அமைக்கும்இடம் அதற்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்குபெறவுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்துசெல்லும் தனித்தனி பாதைதடுப்புகள், அப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வலைகள், வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையில் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை மூடப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கேற்கவுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்வதற்கும், கிருமி நாசினி மற்றும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) ராஜராஜன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக்ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.