130 நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் விற்பனை
தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கு விற்பனை
HIGHLIGHTS
ஊரடங்கு தடை காலத்தில் 130 நடமாடும் காய்கறி வாகனம் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது - மாவட்ட கலெக்டர் த.ரத்னா தகவல்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இன்று (24.05.2021) முதல் 30.05.2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் தொய்வின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, அரியலூர்; மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 201 ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் விற்பனை செய்யும் வகையில் 78 நடமாடும் வாகனங்களும், அரியலூர், மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் தலா 21 என 42 நடமாடும் வாகனங்களும், உடையார்பாளையத்தில் 6, வரதராஜன்பேட்டை 4 என பேரூராட்சி பகுதிகளில் 10 நடமாடும் வாகனங்களும் என மொத்தம் 130 நடமாடும் வாகனங்களுக்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் மூலமாக அனுமதி அட்டை வழங்கப்பட்டு. காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை கண்காணிக்கப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேவையான இடங்களில் காய்கறி விற்பனையை முறைப்படுத்தி, சரியான விலை மற்றும் அளவுகளில் காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது. நடமாடும் வாகனங்கள் மூலமாக காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் வகையில் இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவைரும் வெளியில் வருவதை தவிர்த்து, இந்த வாகனம் தங்கள் பகுதிகளுக்கு வரும் பொழுது ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அச்சமயம் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது குறையும். எனவே, பொதுமக்கள் தங்கள் தேவையான அடிப்படை பொருட்கள் தங்கள் வீட்டின் அருகே கொண்டு வரும்பொழுது கூட்டம் கூடாமல் வாங்கிக்கொண்டு, கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.