சுகாதார தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு
அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மே 31ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணியில் நிரந்தர மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். நிரந்தர துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் மிகக் குறைவான சம்பளத்தில் தொடர்ச்சியாக பல வருடங்களாக ஒப்பந்த முறையில் துப்புரவு பணி செய்து வருகிறார்கள்.
அரசு விடுமுறை அன்று பணி செய்கின்ற போது அவர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அரசு உத்தரவு இருந்தும் எவருக்கும் இலவசமாக மனை வழங்கி சொந்த குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லை.
2017 ஆம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 62 ன் படி அகவிலைப்படி சேர்த்து குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி மறு நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை இல்லை.
குறைந்தபட்சம் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வருடம்தோறும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும் குறைந்த ஊதியத்தை கூட சென்ற 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நடப்பு முடிந்த 2021 முடிந்த ஏப்ரல் வரை இடைப்பட்ட கடந்த 25 மாதங்களாக கலெக்டர் அறிவித்த சம்பளத்தை வழங்காமல் 25 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் போட்ட சம்பளம் தொகை ரூபாய் 259 மட்டுமே வழங்கி கொண்டு வருகிறார்கள்.
இதனால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்க வேண்டிய பண இழப்பு ரூபாய் 7170 ஆகும்.அவர்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்படும் ஈபிஎப் பணத்திற்கான இருப்பு கணக்கு கூட பாதி பேருக்கு சரியான விபரம் இல்லாமலும் மீதி பாதி பேருக்கு கணக்கே கொடுக்காமலும் ஒப்பந்ததாரர் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்.
இதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 15ம் தேதிக்கு பின்னர் தான் சம்பளம் போடப்படும் நிலை.அரசு விடுமுறை சலுகைகள் ,சீருடை, மழைக்கோட்டு ,வார விடுமுறை போன்ற எந்த சலுகைகளும் கொடுக்கப்படுவதில்லை.
கொத்தடிமைகளை போல கருதி நடத்தப்படுகிறார்கள். அரியலூர் நகராட்சி நிர்வாகம் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது . அரியலூர் நகராட்சி ஆணையர் பொறுப்பு .மனோகர் ஏஐடியுசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன நிர்வாகக்குழு உறுப்பினரும் சங்க தலைவருமான த.தண்டபாணி, செயலாளர் எஸ்.மாரியப்பன், கு.சிவஞானம் ,ஆர்.சுப்பிரமணி மற்றும் துப்புரவு தொழிலாளர்களுடன் அரியலூர் நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர் அவர்களிடம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீசை அளித்தனர்
.வரும் மே 31-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பின்னர்,காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் அனைத்து துப்புரவு பணியாளர்களும் அரியலூர் நகராட்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதை குறிப்பிட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர்