ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக தொடர்ந்து ஏமாற்றி வந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடி, கணேஷ் நகர் என்.ஜி.ஓ காலனி தெருவை சேர்ந்த கங்காதரன் மகன் கார்த்திகேயன் , திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், நெட்டவெலம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்ணன் மகன் அருண்குமார் (34) ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து, அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்திலுள்ள ஒரு வங்கி மூலம் ரூ. 34,28,500/- மும் நேரடியாக ரூபாய். 24,00,000/- பெற்றுக்கொண்டு ஆவின் பால் நிறுவனத்தை போல் போலியான பணி நியமன ஆணை தயார் செய்து கொடுத்ததாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சோமசுந்தரம் (31) புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் நபர்களை பிடிக்கும் வகையில், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியமேரி மற்றும் மூன்று உதவி ஆய்வாளர்கள் ஒரு முதல் நிலை காவலர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சி டி.வி.எஸ்.டோல் கேட் அருகில் உள்ள மெரினா டவர் ஹோட்டல் ரூம் நம்பர் 23 -இல் பதுங்கியிருந்த அருண்குமாரை சுற்றிவளைத்த தனிப்படையினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.