கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை ஊக்கப்படுத்திட கலைப் போட்டிகள்
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்திட கலைப்போட்டிகள்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் அரியலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் 15.03.2022 அன்று அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் காலை 10.00 மணிக்கும், ஓவியப் போட்டி மதியம் 02.00 மணிக்கும் நடைபெறும் குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். குரலிசைபோட்டியிலும், நாதசுரம், வயலின்,வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், போண்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரிநெட் போன்ற கருவி இசைப்போட்டியிலும் 5 வர்ணங்கள் இராகம் சுரத்துடன் 5 தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கள், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவரர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிக பட்சம் 3 மணி நேரம் அனுதிக்கப்படுவார்கள்.
மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in இணையதளம் வாயிலாக பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தின் 7708449321, 9047650951 மற்றும் 9443191334 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.