விழுப்புரம் - காட்பாடி இடையே ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விழுப்புரம் - காட்பாடி இடையேயான பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க பயணிகள் வலியுறுத்தல்

Update: 2022-03-07 08:03 GMT

கொரோனா எதிரொலியால் கடந்த 24 மாதங்களாக விழுப்புரம் - திருப்பதி, விழுப்புரம் - காட்பாடி இடையேயான பாசஞ்சர் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா தொற்று வெகுவாக குறைந்து கொண்டே வரும் நிலையில் விழுப்புரம் - காட்பாடி இடையேயான பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை வழியாக விழுப்புரத்துக்கு 2 பாசஞ்சர் ரயில்களும், காட்பாடியில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு பாசஞ்சர் ரயிலும் தினசரி இயக்கப்பட்டன. திருப்பதியில் இருந்து புதுச்சேரி, மன்னார்குடி மற்றும் ராமேசுவரத்துக்கு வாராந்திர விரைவு ரயில்கள் இயங்கின. அதேபோல், திருவண்ணாமலை வழியாக விழுப்புரத்தில் இருந்து கோரக்பூர், புருலியா அதிவிரைவு ரயில்களும், புதுச்சேரியில் இருந்து ஹவுரா, மும்பை தாதர் வரை வாராந்திர விரைவு ரயில்களும் இயக்கப்பட்டன

கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்களின் சேவையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர், மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை ஏற்படுத்தியதால், சிறப்பு ரயில்களைப் படிப்படியாகத் தென்னக ரயில்வே இயக்கியது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து வகையான பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் மற்றும் ஒரு விரைவு ரயிலின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்பதிவு இல்லாத பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் விழுப்புரம்- காட்பாடி மார்க்கத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தென்னக ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது சிறப்பு ரயில்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது அது மாற்றப்பட்டு முன்பு இருந்த நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் பாசஞ்சர் ரயில் துவங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News