மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை

இணையதள மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை கூறினாா்.

Update: 2024-04-29 13:35 GMT

இணையதள பண மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசிய கூடுதல் எஸ்பி

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (இணைய குற்றத் தடுப்பு) பழனி கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், என் கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (இணைய குற்றத் தடுப்பு) பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

அண்மைக் காலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலா்ஷிப் வாங்கித் தருகிறோம். ஆன்லைனில் கை நிறைய சம்பாதிக்கலாம். ஆன்லைனில் முதலீடு செய்து பல லட்சங்களை சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லி பல்வேறு மோசடிகள் நடக்கின்றன.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மீறி யாரேனும் இணையவழி பண மோசடியில் சிக்கி பணத்தை இழந்துவிட்டால் 1930 என்ற எண்ணிலோ, http/www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, இணையவழி குற்றங்கள் எவ்வாறெல்லாம் நடக்கின்றன, இவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகளிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News