பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போராட்டம்

களம்பூர் பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-05-07 03:21 GMT

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட களம்பூர் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

களம்பூா் பேரூராட்சி அலுவலரைக் கண்டித்து, அவரது அறைக்கு பூட்டு போட்டு தலைவா், உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பேரூராட்சி செயல் அலுவலராக உமாமகேஸ்வரி என்பவர் உள்ளார்.

இந்தப் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பழனியும் துணைத்தலைவராக அகமத் பாஷா உள்ளிட்ட 15 பேர் வார்டு உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் காரணமாக குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக உறுப்பினர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கூறிய போதும் இதுவரையில் இது சம்பந்தமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரி நிர்வாகம் சார்ந்த முடிவுகளை மக்கள் பிரதிநிதியாக உள்ள தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் பணிக்கு  வராததால் பேரூராட்சி பணிகள் முடங்கியுள்ளதாகவும் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூறினார்கள்.

பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி அலுவலர் அறைக்கு பூட்டு போட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பேரூராட்சி அலுவலர் உமா மகேஸ்வரி அலுவலகத்திற்கு மதியம் உணவு இடைவேளை வரை வரவில்லை. இது குறித்து பேரூராட்சி உதவி அலுவலரிடம் கேட்டதற்கு மதியம் வரை வரவில்லை என்பதால் விடுமுறை எடுத்திருப்பார். மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து இருப்பார் என கூறினார்.

ஆரணி அருகே பேரூராட்சி அதிகாரியை கண்டித்து பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News