கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

Update: 2023-03-05 13:23 GMT

கூழமந்தல் ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

கூழமந்தல் பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ விசாலாட்சி உடனுறை உத்திர ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அன்றைய பழமொழி. அதற்கு காரணம் அந்த காலத்தில் ஊருக்கு ஒரு கோவில் தான் இருந்தது. மன்னர்கள் காலத்தில் அவர்களால் மட்டுமே கோவில்கள் கட்டப்பட்டு வந்தன. அந்த கோவில்களி்ல் தான்  தற்போது நாம் வழிபாடு செய்து வருகிறோம். ஆனால் தற்போது வீதிக்கு ஒரு கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூழமந்தல் கிராமம். இது திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகாவில் அமைந்துள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி வாகை சூடி வந்தது நினைவாக , தொண்டை நாட்டில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் விக்ரம சோழபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் சோழர் குல சக்கரவர்த்தி ராஜராஜ சோழருக்கும், ராஜேந்திர சோழருக்கும் , குல குருவாக இருந்த ஈசான சிவ பண்டிதர் என்பவரால் உருவாக்கப்பட்ட கோயில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை உத்தர ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் திருக்கோயில் ஆகும்.

சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்த கிராம பொதுமக்கள் சார்பில் தொல்லியல் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொல்லியல் துறை குடமுழுக்கிற்கு உத்தரவளித்த நிலையில், ஐந்து யாக குண்டங்கள் அமைக்கபட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது. நான்கு கால பூஜை இன்று காலை நிறைவேற்று, திருக்குடங்கள் சிவ வாத்தியங்கள் முழங்க திருக்கோயிலை வலம் வந்து திருகுடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

இதன்பின் நவகிரகங்கள் மூலவர் சோழீஸ்வரர் உள்ளிட்டவைக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ராதா செல்வி, விழா ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டனர். திருக்குடமுழுக்கு விழா தீந்தமிழால் ஆடலரசன் அறக்கட்டளை சார்பில்  நடத்தப்பட்டது.

Tags:    

Similar News