சிறுவாபுரி முருகன் கோவிலில், அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோவிலில், செவ்வாய்கிழமையான நேற்று, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரண்டு மணி நேரத்துக்கு மேல், பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-08 03:00 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில், திரண்டிருந்த பக்தர் கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை  ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நேற்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால், சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம் மற்றும் 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து, காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து  இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறுவாபுரி முருகன் கோவிலில், பக்தர்கள் அதிகளவில் வந்ததை அடுத்து பக்தர்கள் சாலை முதல் மண்டபம் வரை வெட்ட வெளியில் நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் செவ்வாய்க்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சின்னம்பேடு ஆரணி இடையே உள்ள சாலை சிறுவாபுரி பகுதியில் பலரும் ஆக்கிரமித்து சாலையோரம் கடைகள் நடத்துவதால், போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுகிறது இது மட்டுமல்லாமல் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக அடிப்படை வசதிகளும், சாலை விரிவாக்கம் செய்து வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடும்  செய்ய வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News