செங்கல் சூளைக்காக அழிக்கப்படும் வனம்: வனத்துறை அதிகாரிகள் மீது மக்கள் புகார்

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் செங்கல்சூளை பயன்பாட்டிற்காக அதிகளவில் மரங்கள் அனுமதியின்றி வெட்டி கடத்தப்படுகிறது.

Update: 2021-10-12 12:15 GMT

மேகமலை வனப்பகுதியில் செங்கல் சூளைக்காக வெட்டி போடப்பட்டுள்ள மரங்கள்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, கடமலை- மயிலை ஒன்றியத்தில் 150க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் வருஷநாடு, பவளம்நகர், சிங்கராஜபுரம், சிறைப்பாறை, தொப்பையாபுரம் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் மரங்களை அறுத்து செங்கல் சூளைக்கு எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் ஒரு மரம் அறுக்க 4 ஆயிரம் ரூபாய் கூலி தருகின்றனர். இவர்களே மரம் அறுக்கும் எந்திரம், ஏற்றி வர லாரி உட்பட அத்தனையும் வைத்துள்ளனர். தினமும் பலநுாறு மரங்கள் அறுக்கப்பட்டு டிராக்டர்கள், லாரிகளில் செங்கல் சூளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனாலும் வனத்துறை அதிகாரிகள் இதனை தடுக்காமல் மவுனம் காக்கின்றனர். இதே நிலை நீடித்தால் வனவளம் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் எனவும், மரங்கள் வெட்டுவதை  கண்டுகொள்ளாமல் உள்ள வனத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

உலகம் முழுவதும் மரம் வளர்ப்பதை முன்னிலைப்படுத்தி தலைவர்கள் பேசிவரும் சூழலில், மரத்தை வெட்டி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவது வேதனைக்குரியது. வனத்துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளால் ஒட்டு மொத்த வனத்துறையினருக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. வனத்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் இதில் தலையிட்டு, தமிழகத்தின் உயிர் வளமாக  விளங்கும் மேகமலை வனத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News