கோவையில் பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் ஆணையரிடம் மனு

கோவையில் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-03-19 06:22 GMT

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டியினர் மனு அளித்தனர்.

கோவை மாநகரில் பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில், கார், ஆட்டோவை தொடர்ந்து தற்போது பைக் டாக்ஸியும் பிரபலமாகி வருகிறது. பைக் டாக்ஸி ஓட்டும் பணியில் ஏராளமான படித்த இளைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பைக் டாக்ஸி ஓட்டும் இளைஞர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் மற்றும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

கடந்த வாரத்தில் பைக் டாக்ஸி ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில், கோவை மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனு விவரம் வருமாறு:

கோவை மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பங்கள் உள்ளன. ரேபிட்டோ போன்ற கார்பரேட் நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் உபயோகத்திற்கு பயன்படுத்துகிறது. இத்தகைய செயல் மோட்டார் வாகன சட்டத்தின் படி குற்றம் என தெரிந்தும் அந்த நிறுவனம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் அந்த பைக் டாக்ஸி செயலியை தடை செய்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மூன்று லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் அதனை தடை செய்யக்கோரி போராடி வருகிறார்கள். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் இதை தொழிலாக கருதி தங்கள் சொந்த வாகனத்தில் வாடகை எடுத்து ஓட்டி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறிக்கு படித்த இளைஞர்கள் இரையாவதை தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் செயலிகள் மூலம் யார் வேண்டுமானலும் ரேபிட்டோ டாக்ஸி ஓட்டலாம் என இருக்கும் சுழலில் இரு சக்கர வாகனத்தில் பயணிகளை அழைத்துச் செல்வதால் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News