அபுதாபியில் பலத்த மழை தெருக்களில் வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அபுதாபியில் பலத்த மழை பெய்து தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-05-02 08:23 GMT
அபுதாபியில் பெய்து வரும் பலத்தமழையால் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்.

ஐக்கிய அமீரகத்தில் மழை கொட்டி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துபாய் மட்டுமின்றி அபுதாபியிலும் கனமழை கொட்டி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

ஆனால், பாலைவன நகரமாகக் கருதப்படும் துபாயில் இப்போது கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சில உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. மோசமான வானிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் தயவுசெய்து கடற்கரைகளில் இருந்து விலகி இருங்கள் என்றும் பள்ளத்தாக்கு பகுதிகள், கனமழை மற்றும் தாழ்வான இடங்களுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரத்தில் மோசமான வானிலை நிலவும் நிலையில், துபாயில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஐக்கிய அமீரக நகரங்களுக்கு இடையே ஓடும் இன்டர்சிட்டி பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. துபாய் மற்றும் அபுதாபியை இணைக்கும் நெடுஞ்சாலை கனமழையால் இன்னும் நீரில் தான் மூழ்கிக் கிடக்கிறது. 

அபுதாபியின் சில பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஜெபல் அலி, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில், சில சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் உணவகங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

பாலைவன நகரமான துபாயில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பெய்த கனமழை அளவுக்கு வானிலை மோசமாக இருக்காது என்ற போதிலும் கவனமாக இருக்க அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை விரைவில் குறையும் என்று வானிலை மையம் கூறினாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. கனமழையால் விமானச் சேவை பாதிக்கப்படலாம் என்பதால் இன்று விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகலாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், துபாயில் உள்ள துறைமுகங்களுக்குத் தற்காலிகமாக அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றம் இருக்கலாம் என்பதால் சொகுசு படகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் வானிலை மோசமாகலாம் என்பதால் டிரைவர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து சேவை: மோசமான வானிலையால் முக்கிய வேலைகளில் உள்ளவர்களைத் தவிர அனைவரும் ஒர்க் ஃபர்ம் ஹோமில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமீரக நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News